×

திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோயிலில் காளை மாடு இறந்தது: கண்ணீர்மல்க மக்கள் இறுதி அஞ்சலி

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோயிலில் ஒரு காளைமாடு பல ஆண்டுகளாக அங்கேயே சுற்றி, சுற்றிவந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்த காளை மாட்டுக்கு பழங்கள் வாங்கி கொடுத்து பாசத்துடன் பார்த்துவந்தனர். சுமார் 6 அடி உயரத்தில் திமிலுடன் ஜல்லிக்கட்டு காளை போல் காட்சி அளித்தபோதும் மக்களை துன்புறுத்தாமல் கோயிலையே சுற்றி, சுற்றி வந்து பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததால் அந்த காளைக்கு நந்திஸ்வரன் என்று பெயர் வைத்து பக்தர்கள் செல்லமாக அழைத்துவந்தனர். பக்தர்கள் மட்டுமின்றி கோயில் அருகாமையில் வசித்துவரும் மக்களும் காளை மாட்டுக்கு பழங்கள், காய்கறி கொடுத்து பேணி காத்து வந்தனர்.

இந்தநிலையில் சென்னை அரும்பாக்கத்தில் பசுமாடு முட்டி பள்ளி மாணவி காயம் அடைந்ததையொட்டி சென்னை மாநகராட்சி முழுவதும் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி பிடித்தபோது இந்த காளை மாட்டையும் திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மாடுகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த காளை மாடு அங்கு சென்றபிறகு எதுவுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்ததும் பக்தர்கள் சென்று காளை மாட்டை மீண்டும் கோயில் பகுதியில் கொண்டுவந்துவிடவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து காளை மாட்டை வாகனத்தில் ஏற்றிவந்து வடிவுடையம்மன் கோயில் அருகே விட்டனர்.

இதன்பிறகும் காளை மாடு மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. பக்தர்கள் கொடுத்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மாலை காளை மாடு கோயிலை நோக்கி பார்த்தபடி திடீரென உயிரிழந்தது. இதை பார்த்ததும் பக்தர்கள் அழுதனர். பின்னர் காளை மாட்டை கோயில் வளாகத்தில் வைத்து மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதுபற்றி அறிந்ததும் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு வந்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் சிவ பக்தர்கள் வந்து காளை மாட்டை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துசென்று கரிமேடு அருகே உள்ள காலி இடத்தில் கிரேன் மூலம் பள்ளம் தோண்டி நல்லடக்கம் செய்தனர்.

The post திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோயிலில் காளை மாடு இறந்தது: கண்ணீர்மல்க மக்கள் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Bull ,Vadudayamman Temple ,Thiruvottiyur ,Kanyarmalka ,Vaduduyamman Temple ,Thiruvottiyur, Chennai ,Cow ,Vadivudayamman temple ,Tiruvottiyur ,Kanaramalka ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...